×

பெரும்பான்மையை இழந்தது பா.ஜ அரசு; அரியானாவில் அடுத்து என்ன?.. ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டு காங்கிரஸ் கடிதம்


* நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சவுதாலா வலியுறுத்தல்

சண்டிகர்: அரியானாவில் பா.ஜ அரசு பெரும்பான்மை இழந்துள்ள நிலையில் அடுத்து என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. அரியானா மாநிலத்தில் பாஜ அரசுக்கு ஆதரவு அளித்து வந்த 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் செவ்வாயன்று தங்களது ஆதரவை வாபஸ் பெற்றனர். இதன் காரணமாக 88 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் பாஜ கூட்டணியின் பலம் 42 ஆக சரிந்துள்ளது. இதனால் முதல்வர் நயாப்சிங்சைனி தலைமையிலான பாஜ அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. அதே சமயம் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் பலம் அதிகரித்துள்ளது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாகவும், ஆட்சி அமைக்க காங்கிரஸ் முயன்றால் ஜனநாயக ஜனதா கட்சி ஆதரவு அளிக்கும் என்றும், அந்த கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுதாலா தெரிவித்துள்ளார்.

இவர் பா.ஜ முன்னாள் முதல்வர் மனோகர்லால் கட்டார் தலைமையிலான ஆட்சியில் துணைமுதல்வராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சவுதாலா நேற்று ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில்,’ அரியானாவில் ஆளும் பாஜ அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. எனவே உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஆளுநர் உத்தரவிடவேண்டும்’ என்று வலியுறுத்தி இருக்கிறார். இதே போல் அரியானா அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி அவரை சந்திக்க நேரம் கேட்டுள்ளது. இதனால் அரியானா அரசியலில் அடுத்து என்ன என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மார்ச்சில் தான் நடத்தினேன் இப்போது எதற்கு?: முதல்வர்
அரியானா முதல்வராக சைனி பதவி ஏற்றவுடன் மார்ச் 13ம் தேதி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி அதில் வெற்றி பெற்றார். எனவே அடுத்த 6 மாதங்களுக்கு, அதாவது செப்டம்பர் 13ம் வரை அங்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டிய அவசியம் ஆளுநருக்கு இல்லை. இது சைனி அரசுக்கு சாதகமாக உள்ளது. இதனால் தான் தற்போது அரியானா பாஜ அரசுக்கு எந்த பிரச்னையும் இல்லையென்று முதல்வர் நயாப் சிங் சைனி தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,’ மார்ச் மாதம்தான் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தினேன். நேரம் வரும் போது, தேவைப்பட்டால் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும். இப்போது அது தேவை இல்லை’ என்றார். அதே போல் அரியானா முன்னாள் முதல்வர் மனோகர்லால் கட்டார் கூறுகையில்,’மேலும் பல எம்எல்ஏக்கள் பாஜவுடன் தொடர்பில் உள்ளனர். எனவே சைனி அரசு பற்றி கவலைப்பட தேவையில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

துஷ்யந்த் சவுதாலா கட்சி எம்எல்ஏக்கள் பா.ஜவுக்கு ஆதரவு
அரியானாவில் துஷ்யந்த் சவுதாலா தலைமையிலான ஜனநாயக ஜனதா கட்சிக்கு அரியானா சட்டப்பேரவையில் 10 எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்களில் பலர் தற்போது பா.ஜவுக்கு பகிரங்க ஆதரவு அளிக்கத்தொடங்கி உள்ளனர். அவர்களில் சிலர் நேற்று முன்னாள் முதல்வர் மனோகர்லால் கட்டார் வீட்டுக்கு சென்று முதல்வர் சைனி அரசுக்கு தாங்கள் ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர்.

The post பெரும்பான்மையை இழந்தது பா.ஜ அரசு; அரியானாவில் அடுத்து என்ன?.. ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டு காங்கிரஸ் கடிதம் appeared first on Dinakaran.

Tags : BJP government ,Ariyana ,Congress ,Saudala ,Chandigarh ,Haryana ,Aryana ,Governor ,Dinakaran ,
× RELATED இந்திய மகள்களின் பாதுகாப்பை விட...